உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் - முஸ்லிம் உறவை சிதைக்க சதி!


இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம் 

முகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 
‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் - வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை என்னைத் தொடர்பு படுத்து வெளியிட்டிருந்தன. 
குறித்த செய்தியில் விபத்துக்குள்ளான  பஸ் எனக்குச் சொந்தமானாதாகவும், அதற்கு வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. குறித்த பஸ் எனக்குச் சொந்தமானது அல்ல. 
குறித்த பஸ் காத்தான்குடியிலிருந்து சொல்வதற்காக அது எனக்குச் சொந்தமானது என்று அனுமானித்து கூறுவது வேடிக்கையானது. 
இது போன்றே புல்லுமலை போத்தல் தொழிற்சாலை சம்பந்தமாகவும் சிலர் தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக என்னைத் தொடர்பு படுத்தி பேசியிருந்தனர். 
வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை திட்டமிட்ட ரீதியில் பிரிப்பதற்கு சில இனவாதிகள் முயற்சி செய்கின்றனர். குறித்த இனவாதிகளனாலேயே இவ்வாறான இனவாத வலையதளங்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ய வேண்டும். 
வெளிநாடுகளில் இருந்தவாரு இயக்கப்படும் இனவாத இணையதளங்கள் வாயிலாக உள்நாட்டில்  வாழ்கின்ற அப்பாவி இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். இதனால் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் மேலும் மோசமடையும். எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இனவாத இணையதளங்களை  முடக்கப்படுவதோடு, அதனோடு சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் அவதானமாகவும் இருக்க வேண்டும்.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்துவதன் ஊடாக சிலர் தமது சொந்த தேவைகளை அடைந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்கு சில அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது. – என்றார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி