ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சாய்ந்தமருது கல்வி மேன்பாட்டுக்கான கல்விச் செயலனிக் குழு உருவாக்கம்.


சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம். றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ், கிராம அபிவிருத்திச் சங்க பிரிதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் உரையாற்றுகையில், கடந்தவருடம் ஓகஸ்ட் மாதமளவில் நிதிகள் கிடைக்கப் பெற்றமையினால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இவ்வருடத்திற்காக நிதி ஒதுக்கீடுகள் வருட ஆரம்பத்தில் கிடைக்கப் பெற்றுள்ளமையினால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சிறப்பாக திட்டமிட்டு மக்கள் பூரண பயன் பெறும் வகையில் மேற்கொள்ள முடியும். 

சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக திணைக்கள தலைவர்களின் கோரிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இக்கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக திணைக்களங்கள் சார்பாக கோரிக்கைகளை இன்னும் சமர்பிற்காதவர்கள் இம்மமாதம் 30 ஆந் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்து இப்பிரதேச அபிவிருத்திச் செயற்பாட்டினை துரிதமாக முன்னெடுப்பதற்கு பங்காற்ற வேண்டும்.  

இப்பிரதேச மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில் எதிர்காலத்தில் மேற்கு வட்டை பிரதேசத்தில் இன்னும் பல காணிகளை சுவீகரித்து அவற்றை நிரப்பி காணிக் கச்சேரி மூலம் காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் திட்டத்தினை இவ்வருடம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பொருளாதார அபிவிருத்திக்காக பொருளாதார அமைச்சினால் கிராம சேவகர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிதி கடந்தவருடம் இப்பிரதேசம் மாநகர பிரதேசம் என்பதால் மறுக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக பிரதமர் மற்றும் குறித்த அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்து மாநகர சபை என்பதால் இப்பிரதேசம் அபிவிருத்தியடைந்த பிரதேசம் அல்ல, இம்மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பதை எடுத்துக் கூறி அத்தடையை நீக்க கோரியிருந்தோம். அந்தவகையில் இவ்வருடம் அத்தடை நீக்கப்பட்டுள்ளது, எனவே இவ்வருடம் அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஒரு கிராம சேவகர் பிரிவுக்கான 5 இலட்சம் ரூபா நிதி எமது பிரதேசத்திற்கும் கிடைக்கப் பெற்றுள்ளது.   

இந்நிதியில் 50 வீதம் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்த முடியும். அந்தவகையில் வசதி குறைந்தவர்கள் சுய தொழில் வாய்ப்பை மேற்கொள்ளும் வகையில் ஒருவருக்கு ஆகக் கூடியது 20 இலட்சம் ரூபா நிதி உதவியின் மூலம் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களை வழங்க முடியும். 

இதற்கான பயணாளிகளை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் உண்மையில் கஷ்டப்படுகின்ற சுய தொழிலை மேற்கொள்ளக் கூடியவர்களை தெரிவு செய்வது அலுவலர்களின் கடமையாகும். எனவே இம்முறை சாய்ந்தமருதின் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் காணப்படும் வறியவர்களுக்கு சுயதொழில் உபகரனங்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

சாய்நதமருது பிரதேசத்தின் பெருமளவிலான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ள வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம், நகர திட்டமிடல் அமைச்சு போன்றவற்றின் நிதி உதவியுடன் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். 

எமது பிரதேசத்தில் மீன்பிடி தொழிலை மேற்கொள்கின்றவர்கள் பெற்றுள்ள வசதி வாய்ப்புகளை தென் பகுதி மீனவர்களுடன் ஒப்பிடுகின்றபோது பல குறைபாடுகள் காணப்படுகின்றன.  இது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வழங்கல் அபிவிருத்தி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். இதற்கமைவாக கடற்பரப்பிலிருந்து தொடர்புகளை மேற்கொள்ளும் வகையில் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 

மேலும் இதன்போது சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு குறித்த வைத்தியசாலையில் விஷேட பிரிவொன்றை அமைப்பதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. 

சாய்ந்தமருது பிரதேச கடற்கரையில் காணப்படும் சுனாமியால் பாதிப்புக்குள்ளான கட்டட இடிபாடுகளை அகற்றி உடல் ஆரோக்கியத்தை பேணும்வகையில் நடைப் பயிற்சியினை மெற்கொள்வதற்கு ஏதுவாக அப்பிரதேசத்தில் நடைபாதை அமைத்து கடற்கரை வீதியினை விஸ்தரிப்புச் செய்து கடற்கரை பிரதேசத்தை அழகுபடுத்துவதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. 


அத்தோடு சாய்ந்தமருது கோட்டக் கல்வி பிரிவின் கல்வி நடவடிக்கையினை முன்னேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு சாய்ந்தமருது கல்வி முன்னேற்றம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படுத்துவதற்கான கல்விச் செயலனிக் குழுவை உருவாக்குவதற்கு தீர்மாணிக்கபட்டு அக்குழுவிற்கான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.


சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். பாறுக், பிராந்திய தொற்று நோய்த் தடுப்பு அதிகாரி டாக்டர் நகூர் ஆரிப், சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தர் எம். உதுமாலெப்பை ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதோடு குறித்த குழுவின் போசகராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் செயற்படவுள்ளார்.   




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது