சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எம்.இஸ்ஹாக் சமாதானத் தூதுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்


(பி.எம்.எம்.ஏ.காதர்)

ஊடகத்துறையின் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எம்.இஸ்ஹாக்கின் ஊடக சேவையை கௌரவித்து இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையம் “சமாதானத் தூதுவர்”  விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த விருது வழங்கிய நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (28-10-2016) கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தின் பிரதம நிறைவெற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட சுவிட்சலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  தூதுவர் கலாநிதி ஹெயின்ஸ் வொக்கர்  நெடர்கோண் இவருக்கான விருதை வழங்கி கௌரவித்தார்.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த உமறுகத்தா ஆசியா உம்மா தம்பதிக்கு 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் மகனாகப் பிறந்தவர்  முகம்மட் இஸ்ஹாக். இவர் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்று பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் உயர் கல்வியைக் கற்றார்.

உயர் கல்வியை முடித்துக் கொண்டு சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னியல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றார்.அதைத் தொடர்ந்து கனேடிய நிறுவனத்தால் நடாத்தப்பட்ட கனரக வாகன சாரதி பயிற்சி பெற்று கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் பெற்று தொழில் நுட்பக்  கல்லூரியின் உயர் சாண்றிதழும் பெற்றுள்ளார். 
   
இவர் சிறுவயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டு செயற்பட்டதன் காரணமாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கல்முனை பிரதேச சபை வேட்பாளராகப்  போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாண பொது எழுதுனர் வேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 1995ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாண சபையின் உள்ளுராட்சித் திணைக்களத்தில் நியமனம் பெற்று மூதூர் பிரதேச சபையில் கடமையாற்றி பின்னர் நிந்தவூர் பிரதேச சபை.கல்முனை மாநகர சபை ஆகியவற்றில் கடமையாற்றி தற்போது கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றுகின்றார்.

இப்பணிக்கு மேலதிகமாக ஊடகப் பணியாற்றிவரும் இவர் 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தினக்கதிர் மற்றும் ஈழநாதம் பத்திரிகைகளுக்கு செய்தி எழுதத் தொடங்கி 2004ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் நிறுவனத்தினால் நற்பிட்டிமுனை விஷேட நிருபராக நியமனம் பெற்று பகுதி நேர பிராந்திய நிரபராக இன்று வரை சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார். 

அத்தடன் தினக்குரல் , வீர கேசரி , சுடர்  ஒளி ஆகிய பத்திரிகைகளுக்கும் பிராந்திய நிருபராகக் கடமையாற்றுவதுடன் இலத்திரனியல் ஊடகங்ளான சுயாதீன தொலைக் காட்சி மற்றும் இலங்கை தேசிய தொலைக் காட்சி ஆகியவற்றின் அம்பாறை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளராகவும் இவர் பணியாற்றி வருகின்றார்.

யூஎஸ்எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் கிழக்கில் இயங்கிவந்த றியல் வொய்ஸஸ் கிழக்கு ஊடக இல்லத்தில் இணைந்து சுனாமி பேரழிவின் பின்னரான மக்களின் வாழ்வியல் தொடர்பான நிகழ்கவுகளை பெட்டக நிகழ்ச்சியாக தயாரித்து பிறை எப்.எம். வானெலியில் ஒலிபரப்புச் செய்துவந்தார்.

அத்தோடு கிழக்கு மாகாணத்தில் உள்ள பின்தங்கிய கிராமங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட துரவந்திய மேடு கிராமத்தைப் பற்றியும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் பற்றியும் பெட்டக நிகழ்ச்சியாக ஊடகங்களுக்கு வெளிட்டார்.

இதற்காக 2008ஆம் ஆண்டு மக்கள் சேவைக்கான ஊடக விருது பெற்றார். மேலும் 2009 ஆம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியத்தால்  சாமஸ்ரீ கலாஜோதி  விருதும் 2011ஆம் ஆண்டு  கண்டி ரத்தின தீபம் பவுண்டேஷனால்  ரத்ன தீபம் விருதும் பெற்றுள்ளார்.  சமூக சேவையில் அதீத அக்கறை காட்டிவரும் இவர் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொருளாளராகவும் கல்முனை  வலயக் கல்வி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் தலைவராகவவும் செயற்பட்டு சிறந்த சமூகப்பணி செய்துவருகின்றார்.
கடந்த 10 வருடமாக www.kalmunainews.com கல்முனை நியூஸ் இணையத்தளத்தின்  பணிப்பாளராக  இருந்து  பிரதேசத்தின்  செய்திகளுக்கு  முக்கியத்துவம் வழங்கி  நம்பகமான தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.



.   


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது