பொதுபல சேனா மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்.


கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் இனவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வினால்  கொண்டுவரப்பட்ட  கண்டன பிரேரணை  ஏக மனதாக  நிறைவேற்றப்பட்டு  கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.

(கண்டன பிரேரணையின் போது ஆற்றிய உரையின் சுருக்கம் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும்)


இங்கு தொடர்ந்து உரையாற்றிய பறக்கத்துள்ளாஹ், இன்று பௌத்த கடும்போக்கு அமைப்புக்களினால் அடிக்கடி முஸ்லிம்கள் சீண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், இது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்றும் குறிப்பாக பொதுபலசேனா அமைப்பினால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை பகிரங்கமாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்கள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோல் முஸ்லிம்களும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை நன்கு புரிந்துகொண்டிருக்கின்றனர். சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் இணைந்து செயற்படுபவர்களாக இருந்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

அதுமாத்திரமல்லாமல் யுத்த காலத்தின்போது முஸ்லிம் மக்களுக்களை பாதுகாத்தது இராணுவம் என்ற போர்வையில் காணப்பட்ட சிங்களவர்களே அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். கி.பி. 627 காலப்பகுதியில் அநுராதபுரத்தை ஆட்சி செய்த 3ம் அக்போ மன்னன் இலங்கையில் முஸ்லிம்கள் தமது மார்க்கத்தினை பரப்புவதற்கும் பள்ளிகளை அமைப்பதுக்கும் அனுமதி அளித்துள்ளதும் 13ம் நூற்றாண்டு காலப்பகுதியில் சிங்கள அரசனான விக்ரமபாகுவின் மகன்கஜபாகுவிற்கு ஏற்பட்ட தீராத நோயினை குணப்படுத்திய முகைதீன் அப்துல் காதிர் ஜெயிலானி அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவனது ஆட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களுக்கும் முகைதீன் பள்ளிவாசல் என பெயர் சூட்டுமாறு உத்தரவிட்டதும், 1707 காலப்பகுதி நரேந்திர சிங்க மன்னனின் மகன் ஒருவன் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அந்த மன்னன் தடையாக இருக்கவில்லை  என்பதும், மகியங்கணை  பங்கரகம என்னும் கிராமத்தில் சிங்கள அரசன் ஒருவனை அந்நியர்கள் கொலைசெய்ய துரத்தியபோது அவ்வரசனை முஸ்லிம் பெண் ஒருவர் மரப்பொந்தினுள் ஒழித்து வைத்து அவன் உயிரைக் காப்பாத்தியதற்காக அப்பெண்ணை அந்நியர்கள் கொலை செய்தார்கள். தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை இழந்த அந்த முஸ்லிம் பெண்ணுக்கு நன்றி கூறும் வகையில் அந்த கிராமத்தில் முஸ்லிம்களைக் குடியேற்றியதும்,
இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பள்ளிவாசல்களையும், மதரஸாக்களையும் தாக்கும், இஸ்லாமிய ஹிஜாப்பை தடைசெய்ய கோரும், மாடு அறுக்க தடைவிதிக்கும் முஸ்லிம் குடியேற்றங்களைத் தடுக்க முற்படும் இனவாத அமைப்புக்கள் மறந்து செயற்படுவது ஏன் என எண்ணத்தோனணுகிறது.

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இவ்வாறான அமைப்புக்கள் அதாவது பொதுபலசேனாவாக இருந்தாலும் சரி, சிங்கள ராவையாவாக இருந்தாலும் சரி அல்லது எந்த மதத்தைச் சார்ந்த எந்த குழுக்களாக இருந்தாலும் சரி அவர்களின் இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முற்படவேண்டும்.

கடந்த 28.04.2014அன்று மத விவகார முறைப்பாடுகளை பதிவுசெய்ய புதிய பொலிஸ்  பிரிவு ஒன்றை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதென்றால் நாட்டில் காணப்படும் ஏனைய பொலிஸ் நிலையங்கள் குறித்த ஒரு மத்திற்கு சார்பாக செயற்பாடுகின்றதா? என கேள்வி எழுப்பினார்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது