நவிபிள்ளை: என்ன அது? மூன்று இலச்சம் சனத்தை புலிகள் பிடித்து வைத்திருந்தவர்களா? இதை பற்றி யாரும் எனக்கு அப்ப சொல்லவில்லையே..? உண்மையாகவா சொல்லுகிறீர்கள். சண்டை நடந்த பகுதிகளில் நான் சந்தித்த தமிழாகளும் நீங்கள் சொல்வது போன்று தான்.. ‘புலிகள் தங்களை தப்பித்து போகவிடாமல் பிடித்து வைத்திருந்ததாக’ என்னிடம் சொன்னார்கள்.
மகிந்த : பின்ன நான் என்ன பொய்யா சொல்லுகிறேன்? இதற்காகத்தான், நான் இங்கு வந்து நிலைமைகளை நேரில் பார்க்குமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். இப்போ உங்களுக்கு உண்மைகள் புரிந்திருக்கும். சரி, சரி நடந்தவைகளை நடந்தவைகளாக இருக்கட்டும். மறப்போம், மன்னிப்போம்… அவற்றை பற்றி பேசுவதை விட்டுவிடுவோம். உங்கள் மதப்போதனைப்படி நடந்தவைகள் நன்றாகவே நடந்தன, நடப்பவைகளும் நன்றாகவே நடக்கின்றன.., இனிமேல் நடக்கபோவதை பற்றி பேசுவோம். நாட்டை சுற்றி நல்லா பார்த்தீங்க தானே..? எப்படி எங்கட நாடு அழகான நாடு தானே?
நவி: சுப்பர். ரீயலி சொர்க்கம் தான். மக்களும் நல்லவர்கள், எங்களை நன்றாக உபசரித்தார்கள். போர் முடிந்து மூன்று வருடத்துக்குள் நாட்டை நல்லா டெவலப் பண்ணியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
மகிந்த : நன்றி. பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் முன்னேற்ற பாதையில் போவோம். முதலில் நாங்கள் உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். புலிகளை அழிப்பதற்கு ஐ.நா.சபையினர்களாகிய நீங்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தீர்கள். அதோடல்லாமல்.., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், கனடா போன்ற நாடுகளும் பயங்கரவாத புலிகளை அழிப்பதற்கு பல்வேறு வகையில் எமக்கு உதவிகளை செய்தார்கள். அவர்களுக்கும் , உங்களுக்கும் நாம் மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
நவி: பங்கரவாதத்தை இந்தப் பிராந்தியத்தில் இல்லாதொழித்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கும், மீள் கட்டுமானம், மீள்குடியேற்றம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மனிதவுரிமை மேம்பாடு… போன்றவற்றை செயல்படுத்துவதற்கும் நாம் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
மகிந்த : நன்றி. உங்களின் பயணத்தின் போது , நீங்கள் பல்வேறுபட்ட தமிழ் தரப்பினர்களை சந்தித்திருந்தீர்கள் .. அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
நவி: என்ன.. ஒரே குற்றமும், குறையும், கூறி குழறி அழுகிறார்கள். ஆனால் நான் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தவரை யாழ்பாணத்திலும் சரி, யுத்தம் நடைபெற்றதாக கூறும் கிளிநொச்சியிலும் சரி நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் மக்கள் வாழ்கின்றார்கள். தமிழர்களுக்கு என்ன வேணும், என்ன பிரச்சனை என்றே விளங்கவில்லை.
மகிந்த : அதுகள் அப்படித்தான். இன்றைக்கு நேற்றல்ல, 60வருடங்களுக்கு மேலாக இப்படியேதான் இருக்கின்றார்கள். குறை சொல்லுவதும், குற்றம் சொல்லுவதை தவிர வேறெதுவும் சொல்ல மாட்டார்கள். அதுகளின் குணங்களை மாற்றமுடியுமா? குறைப்பிரவசங்கள் குறைதான் சொல்லும்.
எங்களின் பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை கொடுத்து ‘ஏ9’ பாதை முதல் அனைத்து பாதைகளையும் புலிகளிடமிருந்து கைப்பற்றி, சீரமைத்து தமிழர்களின் கையில் கொடுத்துள்ளோம். இப்போது வந்த விக்கினேஸ்வரன் ஐயா சொல்லுகிறார்.. ‘அரசாங்கம் இராணுவத்தினரின் பயணத் தேவைகளுக்காகத்தான் பாதைகள் அமைக்கப்படுகின்றனவாம்’ என்கின்றார்.
அப்படியானால், நாங்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைத்துள்ள பாதைகளில் இராணுவத்தினர்கள் மட்டுமா பயணிக்கிறார்கள்? விக்கினேஸ்வரன் ஐயா எந்த பாதையால் யாழ்பாணம் போனவர்? இப்படி எதை செய்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் குற்றமும், குறையும்தான் சொல்கிறார்கள். நாம் எதை செய்வது?
ஆனால்… உங்களுக்கு ஒன்று தெரியுமா..? நாங்கள புலிகளை அழித்து யுத்தத்தை முடிந்த பின்பு, வெளிநாட்டிலிருந்து பல ஆயிரக்கணக்காண புலம்பெயர் தமிழர்கள் நாளாந்தம் நாட்டுக்கு வந்துபோகிறார்கள். அவர்கள் சொல்லுகின்றார்கள்.. றோட்டு நல்லா போட்டிருக்கின்றார்கள், மக்கள் நல்ல வசதியாக இருக்கிறார்கள். நாடு நல்லா இருக்கின்றது. ஆமிக்காரர்கள் நல்லவர்கள் என்கிறார்கள். இதைவிட எங்களுக்கு பெரிய சந்தோசம் வேறென்ன வேண்டும். இந்த தமிழ் அரசியல் வாதிகளும், தமிழ் ஊடகங்களும் தான் இல்லாத பொல்லாத பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நவி: கடைசிகட்ட போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி எங்களுக்கு பலமுறைப்பாடுகள் வந்துள்ளனவே.
மகிந்த : கடைசிகட்ட போரின்போது மட்டுமல்ல.., யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்து நாம் அவதானிப்போமானால் பல இலச்சக்கணக்கான தமிழர்கள் காணாமல் போய்விட்டார்கள். இன்றும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் நாளாந்தம் காணாமல் போய்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 10 இலச்சத்துக்கு மேற்பட்டவர்கள் திடீரென கொஞ்ச காலத்தில் காணமல்போய்விட்டார்கள். அவாகள் எல்லோரும் எங்களிடம் ஓரு வார்த்தை கூட சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக, வாழ்ந்த வீடு, ஊர், மனைவி, தாய் தந்தையர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு காணாமல் போய்விட்டார்கள். எங்கே போனார்கள் எப்படி போனாகள் என்றே நமக்கு தெரியவில்லை.
பின்பு… நாம் அவர்கள் எங்கே போயிருப்பார்கள் என்று தேடிப் பார்த்தபோது, அவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் வசதியாக வாழ்ந்துகொண்டிருப்பதாக அறிந்தோம். வெளிநாடுகளிலிருந்து காணாமல் போனவர்கள், தங்களுக்கு ‘இலங்கை பாஸ்போட்’ வேண்டும் என எங்கள் தூதராலயங்களுக்கு கடிதங்கள் போட்டார்கள்.
நாங்கள் அவர்கள் ‘காணாமல் போனவர்கள்’ என அறிவிக்காமல், அவர்கள் அவ்வளவு பேருக்கும் நமது நாட்டு கடவுசீட்டுக் கொடுத்து அவர்களும் நம்ம நாட்டவர்கள் தான் என்பதை அவர்கள் இருக்கும் நாடுகளுக்கு உறுதி செய்தோம். அவர்களில், சில நன்றி கெட்ட சிலர் எங்கள் நாட்டு கடவுச்சீட்டை பெற்று வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து எங்கள் நாட்டுக்கே எதிராக செயல்படுகிறார்கள்.
அன்று காணமல் போனவர்களும், வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டுகெதிராக செயல்பட்டவர்களும் தான், இப்போ தங்கள் பிள்ளை குட்டிகளுடன் சுதந்திரமாக நமது நாட்டுக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். நான் பயன்படுத்தும் காரைவிட அதிக விலை கூடிய வாகனத்தில் நாங்கள் அமைத்துக்கொடுத்த அதிவே பாதையில் எங்களை முந்திக்கொண்டு ஒடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
புலிகள் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகளை பலவந்தமாக கடத்திக்கொண்டு போய் ஆயுத பயிற்சி கொடுத்து வீணாக சாகடித்தார்கள். அவர்களும் காணாமல் போனவர்கள் தான். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஆணைக்குழு ஒன்று அமைத்துள்ளோம். காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிப்பார்கள் என நம்புகின்றோம்.
நவி: போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், தேசிய இனப் பிரச்சினைக்கான எந்தவொரு அரசியல் தீர்வு திட்டத்தையும் நீங்கள் நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பதாக கூட்டமைப்பினர்கள் என்னிடம் கூறுகிறார்களே?
மகிந்த : நான் இழுத்டிக்கிறேனா? இந்தியாவின் அனுசரணையுடன் 1987 ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தையும், அதன் மூலம் அமைக்கப்பட்ட மகாண சபையையும் கூட்டமைப்பினர்கள் ‘செத்த பிணம்’ , அதில் ஒன்றுமில்லை, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுகின்றார்கள். ‘செத்த பிணத்தை’ போஸ்மோட்டம் செய்யவும் விடுகிறார்களில்லை, செத்த பிணத்தையும் அடக்கம் செய்யவும் விடுகிறார்களில்லை.
கூட்டமைப்பினர்களே செத்த பிணம் என சொல்லும்போது… . ‘செத்த பிணத்தை ’ ஏன் இன்னும் அடக்கம் செய்யாமல் வைத்திருக்கின்றீர்கள் எனது அரசில் அங்கம் வகிக்கம் கட்சிகள் என்னிடம் கேட்கின்றார்கள். இதற்கு நான் என்ன பதில்சொல்ல வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்.
நாங்கள் இப்போ செத்த பிணத்தை அடக்கம் செய்ய வெளிக்கிட்ட பின்பு…. செத்த பிணத்தில் எதோ இருக்கின்றது என கூச்சல்போடுகிறார்கள். செத்த பிணத்தில் எதாவது மோதிரம், சங்கிலி போன்றவைகள் அவாகள் போட்டுவைத்திருந்தால் அவர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள். அவற்றை அவர்களிடம் கழட்டிக்கொடுத்து விட்டு, வடமாகாண சபை தேர்தல முடிந்தவுடன் பிணத்தை எப்படியாவது அடக்கம் செய்யவேண்டும்.
கூட்டமைப்பினர்கள் இதுவரை தமிழர்களுக்கான சரியான தீர்வு திட்டமொன்றை எங்களிடம் முன்வைக்கவில்லையென்பது உங்களுக்கு தெரியுமா? வடமான சபை தேர்தல் செப்ரம்பர் 21 இல் நடக்கவிருக்கின்றது. அதில் கூட்டமைப்பினர்கள் வெற்றிபெற்றால், அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருக்குமென நான் நினைக்கிறேன்.
நவி: எல்லாவற்றுக்கும் எனது நன்றி.
பௌதிக அபிவிருத்திகளுடன் சேர்த்து பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. அத்துடன், சிறுபான்மையினத்தவர்களின் மதஸ்தலங்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உரியநடவடிக்கை அவசியமெனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவசியமான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடனான ஐ.நா. ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சந்திப்பை தொடர்ந்து அங்கு ஆராயப்பட்ட விடயங்களை ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு வெளியிட்டது.
அதில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தத்தின் பின்னர் இலங்கை பெற்றுள்ள வெற்றிகள் குறித்து ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் வடக்கு மற்றும் கிழக்குக்கான தனது விஜயத்தின்போதே புனர்நிர்மாணம், மீள்கட்டுமானம், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்தவொரு பகுதிக்கும் சுதந்திமாக சென்றுவர ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு வழங்கப்பட்ட வசதி குறித்து இதன்போது ஜனாதிபதி அவரிடம் வினவினார். இதற்கு பதிலளித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதியான உங்கள் கவனத்தை பாராட்டுகிறேன் என பதிலளித்தார். இதனையே அடுத்தே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றினையும் கவனத்திற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் நவிப்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments
Post a Comment