வீட்டு சண்டை தொடருமா முடியுமா ஹக்கீம்-பஷீர்

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே இவர்கள் இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதே கட்சித் தலைவர் மற்றும் தவிசாளர் ஆகியோரிடையே இந்த வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸானது ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடனேயே இணைந்து போட்டியிட வேண்டும் என அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாமல் வட மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்றால் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் பஷீர் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடன் இணைந்த நிலையிலேயே கல்முனை மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இதனால் வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியும். இதற்காக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஹக்கீம் பதிலளித்துள்ளார். இதனையடுத்தே அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறாக சென்று கொண்டிருந்த சமயத்தில், 'உங்களுக்கு என்மீது நம்பிக்கை இல்லை. இதனால் நான் எப்படி உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்' என அமைச்சர் பஷீர், கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளார். 

இதற்கு, 'உங்களை எப்படி நம்புவது. கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது கட்சியின் அனுமதியின்றி பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தீர்கள். தற்போதும் கட்சியின் அனுமதியின்றி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுள்ளீர்கள். இப்படி கட்சிக்கு துரோகமிழைத்துள்ள நிலையில் உங்களை எப்படி நம்புவது' என அமைச்சர் ஹக்கீம் கட்சியின் உயர் பீட கூட்டத்தில் பஷீரின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் கட்சியின் அதியுயர் பீட கூட்டம் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படாமல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி