ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணையாவிட்டால் பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது


இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 (ஆர்.ஹஸன்)

அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமைப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இந்த சமூதாயம் ஒன்றிணையாதுவிட்டால் எமது பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது போய்விடும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்தார். 
இதேவேளை, சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் பாரிய பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்காக குத்பாக்களை பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 
காத்தான்குடி, ஜாமியதுல் ஜமாலியா அறபுக் கல்லூரியின் அல் மர்ஹ{ம் மீரான் முபீன் ஆலிம் மண்டப திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
ஒருவரை ஒருவர் விமர்சிப்பதாலோ, குறைகூறுவதனாலோ, குற்றம்சாட்டுவதனாலோ நாங்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வில்பத்து, இறக்காமம் பிரச்சினைகள் நிறைவடையும் போது வேறு எங்காவது இன்னுமோர் பிரச்சினையை கிழப்பிவிடுவார்கள். இதனை வெறுமனே பேசி காலத்தைக் கடத்துகின்ற சமூகமாக இல்லாது அதனை சரியான முறையில் முகம்கொடுக்க நாங்கள் தயாராக வேண்டும். 
பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாங்கள் பலமான சமூகமாக  - சக்தியாக மாற வேண்டும். அவ்வாறு மாறாமல் ஒருவரை விமர்சித்துக் கொண்டு இருப்போமானால் எங்களை நாமே ஏமாற்றிய சமூகமாக மாறிவிடுவோம். 
இந்தச் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் பொறுப்பு உலமாக்களுக்கும் உள்ளது. வெறுமனே அரசியல் தலைவர்களை மாத்திரம் குறைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. உலமாக்களும் குத்பாக்களை பயன்படுத்த வேண்டும். அதற்கான தலைமையை ஏற்க வேண்டும். மார்க்கத்தை போதிப்பது மாத்திரம் தான் எங்களது கடமை என்று நின்றுவிடாது அதற்கு அப்பால் சென்று அரசியல் தலைமைகளை வழிநடத்தவும் - ஒன்றுபடுத்தவும் வேண்டும். 
அரசியல் தலைமைகள் ஒன்றுபடாத போது, சமூக ஒற்றுமைக்காக குத்பாக்களை பயன்படுத்தவும் வேண்டும். அவ்வாறான ஒரு கட்டத்திலேயே இன்று முஸ்லிம் சமூகம் உள்ளது. – என்றார். 



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது