புதிய பள்ளி வாசல்களுக்கான தேவை என்ன ?


அண்மைக் காலமாக பெரும்பாலான முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியவாறான துர்ப்பாக்கியகரமான சம்பவங்கள் தினமும் இடம் பெறுவதை ஊடகங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் அறிய முடிகின்றது.
இதுவரை காலமும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வந்த எமது சகோதர, சகோதரிகள் மத்தியிலே நாளாந்தம் பிணக்குகளும், கைகலப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
மாற்று சமூகம் எங்களைக் காயப்படுத்துகின்றது என்று ஓப்பாரி வைக்கின்ற நாங்கள் எங்களுக்கிடையிலே அடித்துக் கொண்டு, மற்றவர்கள் எங்களைப் பார்த்து எள்ளி நகையாடுமளவிற்கு கேடு கெட்டு நிற்கின்றோம்.' சாய்ந்தமருதில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு . . .', 'மருதமுனையில் குத்பாவிற்கு தடை . . .' என்பன பிந்திய ஒருசில வெளிவந்த செய்திகள். வெளிவராதவைகள் பல இருக்கலாம். இவை எல்லாவற்றிலும், எமது சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட, ஏற்படுகின்ற சச்சரவுகள் எல்லாவற்றிலும் நாங்கள் அறியக்கூடிய அடிப்படையான பிரச்சினை ஒன்றேயொன்று தான். அது தான் . . . புதிய பள்ளிவாசல்களின் எழுகை.

நாங்கள் தொழுகைக்காக பள்ளிவாசலை நோக்கிச் செல்லும் போது வைக்கின்ற ஒவ்வொரு காலடிக்கும் நன்மைகள் ஏராளம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்ற நடைபெறுவது என்ன? நன்மைகளைக் கூட்டிக் கொள்வதற்குப் பதிலாக, அதனைக் குறைக்கின்ற விதமாக அடிக்கொரு பள்ளிவாசல்கள் அமைக்கப்படுகின்றன. இதில் சம்பந்தப்படுவது எந்தப்பிரிவு அல்லது எந்தக் குழு என்பதல்ல இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம். புதிய பள்ளிவாசலொன்று அமைக்கப்படுகின்றது என்ற விடயமே நோக்கப்பட வேண்டும். ஏனெனில், எந்தக் குழு என்று ஆராய்கின்ற போது அது ஒருபக்கச் சார்பாக திரிவு படுத்தப்பட்டு விடும்.
வசதி படைத்தவர்கள் பெருமைக்காகவும், இன்னும் சிலர் வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக் கொண்டும் பள்ளிவாசல்களைப் புதிதாகக் கட்டுகின்றார்கள். இவ்வாறு புதிதாக பள்ளிவாசல்கள் அமைக்க முற்படுகின்ற போது, அந்தப் பகுதியிலே பள்ளிவாசலின் தேவைப்பாடு என்ன என்பது பற்றியோ அல்லது அந்தப் பள்ளிவாசலை புதிதாக அமைப்பதால் அதனைச் சுறிறியுள்ள அடையும் நன்மைகள் என்ன என்பது பற்றியோ யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவ்வாறு அமைக்கப்படுகின்ற போது தான் நிறையவே குழப்பங்கள் ஏற்படுகின்றன.
ஒரு சில யார்கள் தூரத்திலே ஏற்கெனவே ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது என்ற தெரிந்திருந்தும், அதற்கு அருகாமையிலே இன்னுமொரு பள்ளிவாசலை புதிதாக அமைக்கிறார்கள். இவ்வாறு நிருமாணிப்பதற்கான தேவைப்பாடு என்ன? இதனால் ஏற்படுகின்ற குழப்பங்களுக்கும் வீணான சச்சரவுகளுக்கும் பொறுப்புக் கூறுவது யார்? பள்ளிவாசல்களை அமைத்து அல்லது பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு உதவி செய்து நன்மைகளைக் கொள்ளையடியுங்கள் என்று சொல்லப்படுவதே இவர்கள் முன்வைக்கின்ற வாதம். ஆனால், இங்கே இவர்கள் நன்மைகளைக் கொள்ளையடிப்பதற்குப் பதிலாக, ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையுமல்லவா குழிதோண்டிப் புதைத்து விடுகிறார்கள்.
இந்தப் பிரச்சினைகள் குறிப்பாக, ஓரளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறிய ஊர்களிலேயே ஏற்படுகின்றது. ஏனெனில், ஏற்கெனவே தாராளமாக பள்ளிவாசல்கள் நிறையவே இந்த ஊர்களில் காணப்படுகின்றன. தனவந்தர்களும், வெளிநாட்டு நிதிகளைப் பெறுகின்ற கொள்கைவாதிகளும் நிறையவே பள்ளிவாசல்கள் இருக்கின்ற இத்தகைய ஊர்களிலே தான், மீண்டும் மீண்டும் புதிதாக பள்ளிவாசல்களை அமைக்க முற்படுகின்றார்கள்.
உதாரணமாக, ஒரு சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கும் குறைவான வாழ்விடத்தைக் கொண்ட சாய்ந்தமருதிலே, ஏற்கெனவே சுமார் பதினேழு பள்ளிவாசல்கள் அமையப் பெற்றிருக்கின்றன. 
இந்த நிலைமையில், இன்னும் இங்கே பள்ளிவாசல்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் தான் என்ன? 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னான காலப்பகுதியில், வீடுகள் அமைத்து வாழ்வதற்கே இடமில்லாமல், எதிர்காலத்தில் என்ன செய்யப் போகின்றோம் என்பதற்கு விடை தெரியாமலிருக்கின்ற இந்த நிலைமையில், புதிதாக மீண்டும் மீண்டும் பள்ளிவாசல்கள் அமைக்கப்படத்தான் வேண்டுமா? இருக்கின்ற பள்ளிவாசல்களில் எத்தனை பள்ளிவாசல்கள் தொழுவதற்கு இடமில்லாமல் நிரம்பி வழிகின்றது என்பதை இவர்களால் காட்ட முடியுமா?

எத்தனையோ ஊர்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எத்தனையோ பள்ளிவாசல்கள் இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தத் தனவந்தர்களும், வெளிநாட்டு நிதிகளை தாராளமாகப் பெற்றுக் கொண்டிருக்கும் கொள்கைவாதிகளும் இவ்வாறான ஊர்களைத் தேடிச்சென்று புதிதாக பள்ளிவாசல்களை அமைத்துக் கொடுக்கலாம் அல்லது இருக்கின்ற பள்ளிவாசல்களுக்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதுதானே ஏற்புடையதாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயமாகும்.

பள்ளிவாசல்களைக் கட்டி வெறுமனே பாழ்போடுவதற்குப் பதிலாக, மக்களை பள்ளிவாசல்களின் பக்கம் கவருவதற்கான, அழைப்பதற்கான முயற்சிகளைச் செய்யலாமே. ஏத்தனையோ குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எத்தனையோ சகோதரர்கள் தொழில் இல்லாமலும், தொழில் செய்வதற்கான மூலதனமில்லாமலும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற பாடசாலை, வைத்தியசாலை போன்ற எத்தனையோ அரச நிறுவனங்கள் எத்தனையோ குறைபாடுகளுடன் இருக்கின்றன. அந்தத் தனவந்தர்களும், வெளிநாட்டு நிதிகளைத் தாராளமாக கறந்து கொண்டிருக்கின்ற கொள்கைவாதிகளும் இவ்வாறான விடயங்களிலும் கவனம் செலுத்தலாமே. இவற்றுக்கு அல்லாஹ்விடத்தில் நன்மைகள் கிடைக்காதா என்ன.
இனிவரும் காலங்களில் ஒரு இடத்திலே பள்ளிவாசல் அமைக்கப்பட வேண்டுமானால், அதனைச் சுற்றியுள்ள மக்களின் கருத்துக்கள் பெறப்படுவதுடன், அவர்களுக்கு பள்ளிவாசல் தேவைப்படுமாக இருந்தால் அவர்களின் பகிரங்க வேண்டுகோள் முன்வைக்கப்பட வேண்டும். இரவோடிரவாக பள்ளிவாசல்கள் அமைக்கப்படுகின்ற வில்லங்கமும், கோழைத்தனமும் இல்லாமலாக்கப்பட்டு, குறித்த பகுதி மக்களுடன் வெளிப்படையாக கலந்துரையாடி, அமைதியான முறையில் தேவைப்பட்டால் மாத்திரமே பள்ளிவாசல்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.
யா அல்லாஹ்! தீய எண்ணங்களில் இருந்தும் எங்கள் அனைவரையும் காப்பாற்றுவாயாக! ஆமீன்!

நன்றி : DR .என்.ஆரிப் 

புதிய பள்ளி வாசல்களுக்கான தேவை என்ன ?

Comments

  1. சத்தமாக சொல்லாதீர்கள் .....!! உண்மைகளை ,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்