தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதில் அரசுக்கு தொடர்பில்லை: இராணுவ கட்டளை தளபதி






தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரோ  தெரிவித்தார்.

இச்சம்பவமானது சிறு இனவாத குழுக்களுக்களின் செயற்பாடேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று புதன்கிழமை கல்முனைக்குடி ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போதே கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தவிர, பள்ளிவாசல் உடைக்கப்படவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் ஊடகங்களால் திரிவுபடுத்தப்பட்டதேயாகும். அவ்வாறு சம்பவம் இடம்பெற்றதாக நீங்கள் கருதினால் உங்கள் அனைவரையும் தம்புள்ளைக்கு கூட்டிச் சென்று குறித்த பள்ளிவாசலை காட்டுவதற்கு தான் தயாராகவுள்ளேன்" என்றார்.

கல்முனைகுடி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற  இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண இராணுவ  கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல்  லால் பெரேரா, அம்பாறை மாவட்ட கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் ஹரிந்த பெரேரா, அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல, அம்பாறை மாவட்ட உலமா சபை தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி மற்றும் அகில இலங்கை நல்லுறவு ஒன்றிய தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று