தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசிய மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய தேரரின் நடவடிக்கை ஊடகவியலாளர்களை அடக்கு முறைக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும்.


“கடந்த 03.12.2016 அன்று மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிப்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீனுக்கு மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் காத்தான்குடி மீடியா போரம் தமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
ஊடகவியலாளர்களின் பணி மகத்தானதாகும். ஊடகவியலாளர்கள் யுத்த காலத்திலும், கடந்த ஆட்சியிலும் தமது உயிரை பணயம் வைத்து செய்தி சேகரித்த காலம் போன்றே இந்த நல்லாட்சியிலும் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை தேரரின் நடவடிக்கை காட்டுகின்றது.
பத்திரிகையாளர்கள் சமூக நலனுக்காக நடுநிலைமையாக இருந்து செயற்படுபவர்கள். தமது ஊடக பணியை பக்கம் சாராது, பத்திரிகை தர்மம் பேணி பல்வேறு சிரமங்களுடன் பணிபரிபவர்கள். இனவாதங்களை பேசி மக்களிடையே இனக்குரோதத்தையும் குழப்பங்களையும் அமைதியாக வாழும் மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.
மூன்று தசாப்த காலமாக யுத்தத்தால் சின்னாபின்னப்பட்டிருந்த எமது மட்டக்களப்பு மாவட்டம், தற்போது அமைதியால் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான சூழலில் சுதந்திரமாக செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் பௌத்த பிக்கு அம்பிட்டிய தேரரால் மிகவும் காரமான வார்த்தைப் பிரயோகங்கள் பிரயோகிக்கப்பட்டமையானது கவலையை தருகின்றது.
கடந்த காலங்களில் மட்டக்களப்பிலுள்ள மங்களராமய பௌத்த விகாரைக்கு தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சென்று அந்த தேரரை சந்தித்து பல தடவைகளில் அவரின் செய்திகள், அங்குள்ள நிகழ்வுகள் தமிழ் ஊடகங்களில் வந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
சமூகங்களை பிளவுபடுத்தி, இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க முற்படும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் அவர்களை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் எமது காத்தான்குடி மீடியா போரம் வேண்டிநிற்கின்றது.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமரணரத்தின தேரர் மட்டக்களப்பிலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தொடா்பில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் கலையை தந்துள்ளதுடன் காத்தான்குடி மீடியா போரம் தமது கண்டனத்தை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றது“ என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது